உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழங்களை பழுக்க வைக்க ரசாயன ஸ்பிரே; மக்கள் புகார்

பழங்களை பழுக்க வைக்க ரசாயன ஸ்பிரே; மக்கள் புகார்

மேட்டுப்பாளையம்: பழங்களை பழுக்க வைக்க, ரசாயன ஸ்பிரே அடித்தும், தர்பூசணி பழத்தில் நிறத்துக்காக, ரசாயன ஊசி போடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே உணவு பாதுகாப்பு அதிகாரி மற்றும் நகராட்சி நிர்வாகம் இவற்றை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோடை காலம் துவங்கியதை அடுத்து, வீதியெங்கும் தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெறுகின்றன. அதேபோன்று பழக்கடைகளில் வாழைப்பழங்கள், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் தர்பூசணி பழத்தில், சிவப்பு நிறத்திற்காகவும், சுவை இனிப்பாக இருக்க, ரசாயன ஊசி போடுவதாக புகார் கூறப்படுகிறது. அதேபோன்று வாழை காய்களை, பழுக்க வைக்க ரசாயன ஸ்பிரே அடிப்பதாகவும், பழக் குடோன்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன என்ற புகாரும், பொதுமக்களிடையே கூறப்படுகிறது. கோடை சீசனை அடுத்து பொதுமக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும், தர்பூசணி பழத்தில், ரசாயன ஊசி செலுத்தப்படுகிறதா என்பதையும், வாழைப் பழக்கடைகளிலும், உணவு பாதுகாப்பு அதிகாரிகளும், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்ய வேண்டும். ஏதேனும் தவறுகள் நடக்கும் பட்சத்தில், பழங்களை முற்றிலுமாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி