உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுரங்கப்பாலத்துக்கு பதிலாக மேம்பாலம் கட்ட வேண்டுமென மக்கள் வலியுறுத்தல்

சுரங்கப்பாலத்துக்கு பதிலாக மேம்பாலம் கட்ட வேண்டுமென மக்கள் வலியுறுத்தல்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தில் ரயில்வே ரோட்டில் சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவை - பொள்ளாச்சி இடையே உள்ள ரயில் பாதை, கிணத்துக்கடவு அரசம்பாளையம் செல்லும் ரோட்டில் குறுக்கிடுகிறது. இப்பகுதியில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோட்டில் தினமும் ஏராளமானோர் வாகனங்களில் செல்கின்றனர். இந்த ரயில்வே கேட் தினமும், நான்கிலிருந்து ஐந்து முறை அடைக்கப்படுவதால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்கும் பொருட்டு, ரயில்வே நிர்வாகம் சார்பில் இந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒன்றிய நிர்வாகம் சார்பில் பொதுமக்களிடம், மனு வாயிலாக கடந்த 25ம் தேதி கருத்து கேட்கப்பட்டது. பொதுமக்கள் தரப்பில் பல மனுக்கள் வந்தது. இதில், 'சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால், மழை காலங்களில் தண்ணீர் தேக்கமடைய அதிக வாய்ப்புள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படலாம். எனவே, சுரங்கப்பாதைக்கு பதில் மேம்பாலம் அமைக்க வேண்டும். இந்த பணிகள் மேற்கொள்ளும் போது, மக்கள் செல்வதற்கு மாற்று பாதைகள் உள்ளது. ஆனால், அரசம்பாளையம் முதல் கொண்டம்பட்டி செல்லும் ரோடு மிகவும் மோசமான நிலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இதை விரைவில் சீரமைக்க வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'ரயில்வே சுரங்கப்பாதை வேலைகள் மேற்கொள்ளும் போது, மக்கள் செல்ல இரண்டு, மூன்று மாற்று பாதைகள் உள்ளது. இதில், கொண்டம்பட்டி செல்லும் ரோடு மட்டும் சேதமடைந்திருப்பதால், இந்த ரோட்டில் சீரமைப்பு செய்ய பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒன்றரை மாதத்தில் இந்தப் பணிகள் முடித்து, மக்கள் பயணிக்கும் வகையில் ரோடு அமைக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை