ஆக்கிரமிப்பால் சுருங்கிய விளையாட்டு மைதானம்
வால்பாறை: கல்லுாரி விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்பால் சுருங்கி வருவதால், மாணவர்கள் கவலையடைந்துள்ளனர். வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், தற்போது, 936 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச்சேர்ந்த, 380 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இக்கல்லுாரி மொத்தம், 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. விளையாட்டு மைதானம் மட்டும், 3.5 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இந்நிலையில், கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் நலன் கருதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில், விளையாட்டு மைதானத்தையொட்டி, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,509 மாணவர்கள் தங்கும் வசதிக்காக ஹாஸ்டல் கட்டு ம் பணி நடக்கிறது. இதன் அருகிலேயே அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு, ஹாஸ்டல் கட்ட, 2.5 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறையினர் வழங்கியுள்ளனர். இதே போல் நகராட்சி அதிகாரிகளும், கல்லுாரிக்கு சொந்தமான இடத்தை, 60 சென்ட் ஆக்கிரமித்துள்ளனர். அரசு கல்லுாரிக்குச்சொந்தமான இடத்தை, பிற துறைகளைச்சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், மாணவர்கள் கவலையடைந்துள்ளனர். கல்லுாரி போராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கூறியதாவது: கல்லுாரி வளாகக்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை, மாணவர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளும் இங்கு தான் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் விளையாட்டு மைதானத்தில் பிற துறைகளுக்கு கட்டடம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டதால், மைதானம் சுருங்கி வருகிறது. இதைத்தவிர்க்க, கல்லுாரி அல்லாத பிற துறைகளுக்கு கட்டடம் கட்ட அதிகாரிகள் அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், நேரடியாக ஆய்வு செய்து, விளையாட்டு மைதானத்தை முழுமையாக மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு கூறினர்.