உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருத்துவ மாணவி இறப்பில் மர்மம் கொலையா... தற்கொலையா; போலீஸ் விசாரணை

மருத்துவ மாணவி இறப்பில் மர்மம் கொலையா... தற்கொலையா; போலீஸ் விசாரணை

கோவை; பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், மருத்துவ மாணவி உயிரிழந்த வழக்கில், மாணவியின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.கோவை பீளமேடு பகுதியில், தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டியை சேர்ந்த பவபூரணி, 29 முதுகலை மயக்க மருந்தியல் படித்து வந்தார்.இவர் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை ஐ.சி.யு., பிரிவில் கடந்த, 5ம் தேதி இரவு பணியில் இருந்தார். இதன் பின் ஓய்வு எடுக்க சென்றதாக கூறப்படுகிறது.மருத்துவ ஊழியர்கள் ஓய்வு அறைக்கு சென்று பார்த்தபோது, ஓய்வு அறையில் உள்ள கழிப்பறையில் மாணவி சடலமாக கிடந்தார். பீளமேடு போலீசார் உடலை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்தனர்.மாணவியின் மரணம் கொலையா, தற்கொலையா என்ற ரீதியில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.போலீசார் கூறியதாவது:மாணவியின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலில் காயங்கள் எதுவும் இல்லை. எனினும், அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகே, மரணத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில், மாணவியின் மரணம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மருத்துவ மாணவர் சங்கம் கோரிக்கை

மருத்துவ மாணவி பவபூரணியின் மர்மமான இறப்பிற்கு, உரிய விசாரணை வேண்டும் என, தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு மருத்துவ சங்க மாணவர்கள் கூறுகையில், 'மாணவியின் மரணம் குறித்து தற்போது வரை, எவ்வித தெளிவான பதில்களும் போலீசார் தரப்பிலோ, கல்லுாரி தரப்பிலோ தரப்படவில்லை. மாணவியின் மரணத்துக்கான காரணத்தை கண்டறிந்து, இதுபோன்று இனியொரு மரணம் நடக்காத வகையில், உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ