நந்தவனத்தில் தர்ப்பணம் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் தயார்
மேட்டுப்பாளையம்; ஆடி அமாவாசை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் நந்தவனத்தில், இறந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்ய, அனைத்து ஏற்பாடுகளையும் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். மேட்டுப்பாளையம் கோவிந்தம் பிள்ளை மயானம் அருகே, நகராட்சிக்கு உட்பட்ட, அனைத்து ஹிந்து சமுதாய நந்தவனம் உள்ளது. நந்தவனத்தின் கீழே பவானி ஆறு ஓடுகிறது. மேல் பகுதியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சிவன் கோவில் உள்ளது. அதனால் காசிக்கு இணையாக, இந்த நந்தவனம் அமைந்துள்ளது. இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு, ஏராளமான பொதுமக்கள், தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்ய, நந்தவனம் நிர்வாகத்தினர் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதுகுறித்து அனைத்து ஹிந்து சமுதாய நந்தவனத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சுகுமார், பொருளாளர் அருணாச்சலக்குமார் ஆகியோர் கூறியதாவது: திருச்சி, கடலூர், கோவை, பெங்களூரு ஆகிய ஊர்களில் இருந்து கூடுதலாக, 30 புரோகிதர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இன்று நந்தவனத்தில் மொத்தமாக, 43 புரோகிதர்கள் புரோகிதம் செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் பொதுமக்களுக்கு தண்ணீர், டீ, பிஸ்கட் மற்றும் காலை முதல் தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இன்று காலை அதிகாலை, 4:00 மணி முதல் நந்தவனம் திறந்திருக்கும். வருகிற பொதுமக்களை வரிசையாக நிற்க வைக்கவும், ஒவ்வொருவராக புரோகிதம் செய்ய அனுப்புவதற்கும், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுவர். இவ்வாறு நிர்வாகத்தினர் கூறினர்.