உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஈஷா கிராமோத்சவ வீரர்களை நேரில் அழைத்து அங்கீகரித்த பிரைம் வாலிபால் லீக்!

ஈஷா கிராமோத்சவ வீரர்களை நேரில் அழைத்து அங்கீகரித்த பிரைம் வாலிபால் லீக்!

கோவை: ஈஷா கிராமோத்சவம்-2025 இறுதிப்போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளின் சிறந்த வீரர்கள், பிரைம் வாலிபால் லீக் போட்டிகளை நேரில் காண சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர். இது கிராமப்புற இளைஞர்களை ஊக்கப்படுத்தும் செயல் என சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார். ஈஷா கிராமோத்சவம் இறுதிப்போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றன. இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் சேலம் உத்தமசோழபுரம் அணியும், பெண்களுக்கான த்ரோபால் போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த படகணுரூ அணியும் முதலிடத்தை பிடித்தது. மேலும் சிறந்த வீரர்களாக உத்தமசோழபுரம் அணியை சேர்ந்த மணிகண்டனும், படகணுரூ அணியை சேர்ந்த ரேகா மற்றும் ஸ்வேதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் கிராமப்புற பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிராமப்புற வீரர்களை அங்கீகரிக்கும் வகையில் பிரைம் வாலிபால் போட்டிகளை நேரில் காண அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். பிரைம் வாலிபால் சார்பில் அவர்களுக்கான விமான டிக்கெட், நட்சத்திர விடுதியில் தங்கும் வசதி, சர்வதேச விளையாட்டு வீரர்களிடம் கலந்துரையாடும் வாய்ப்பு ஆகியன ஏற்பாடு செய்யப்பட்டது. குறிப்பாக ஈஷா கிராமோத்சவ வீரர்கள் சென்னை பிளிட்ஸ் அணி வீரர்களை சந்தித்து உரையாடினர். மேலும் அவர்களுக்கு போட்டித்தொடரில் பயன்படுத்தப்படும் வாலிபால் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. இதனுடன் ஈஷா கிராமோத்சவம் தொடர்பான அவர்களின் அனுபவ பகிர்வு காணொளியும் போட்டி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் பேசிய மணிகண்டன், “நான் ஒரு கிராமத்தில் விளையாடி கொண்டிருக்கிறேன், சர்வதேச தொழில்முறை விளையாட்டு வீரர்கள் பங்குபெறும் பிவிஎல் போட்டிகளை தொலைக்காட்சி மற்றும் செல்போனில் மட்டுமே பார்த்து வந்துள்ளேன். இப்போது நேரில் பார்க்கும் போது தாங்க முடியாத அளவிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. கிராமோத்சவ இறுதிப்போட்டியில் சிறந்த வீரராக சத்குரு என்னை அறிவித்த போது என்னை விட என்னுடைய கிராம மக்கள் அதிகம் மகிழ்ச்சி அடைந்தனர்.” எனக் கூறினார். இதில் ரேகா பேசுகையில், “பிவிஎல் போன்ற வாலிபால் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற கனவு இருக்கிறது. இன்று நேரில் பார்க்கும் போது அந்த கனவிற்கு ஊக்கம் அளிப்பது போல் உள்ளது” எனக் கூறினார். ஸ்வேதா பேசுகையில், “கிராமங்களில் இருக்கும் எங்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் கிடைக்காது. பிவிஎல் போட்டிகளை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது” எனக் கூறினார். இது தொடர்பான சத்குருவின் எக்ஸ் தள பதிவில், “பாரதத்தின் கிராமப்புறங்களில் இருக்கும் இளைஞர்களின் சக்தி, ஏதாவது ஒரு விளையாட்டு வடிவத்தின் மூலம் மகிழ்ச்சியான வெளிப்பாட்டைக் காண வேண்டும். பிரைம் வாலிபால் போன்ற முக்கிய விளையாட்டு லீக்குகளின் அங்கீகாரம், மேலும் மேலும் கிராமப்புற இளைஞர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிப்பதற்கான ஒரு முக்கியமான படியாகும்.” எனக் கூறியுள்ளார். https://x.com/SadhguruJV/status/1979043106721820961பிரைம் வாலிபால் லீக் போட்டிகள் வாலிபால் விளையாட்டை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியாக நடத்தப்படுகிறது. கிரிக்கெட் போட்டி தொடர்களில் முன்னணியில் இருக்கும் ஐபிஎல்-க்கு இணையாக இந்த வாலிபால் போட்டித்தொடர் நடத்தப்படுகிறது. இதில் தேசிய, சர்வதேச தொழில்முறை வாலிபால் விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுவர். இந்த போட்டித்தொடர் இந்திய வாலிபால் வீரர்களுக்கு சர்வதேச தரத்தில் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை