போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
வால்பாறை: விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் சார்பில் பரிசு வழங்கப்பட்டது. வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், அரசு கல்லுாரியில் நடந்த வாலிபால் போட்டியில் விளையாடி இரண்டாம் பரிசை பெற்றனர். இதே போல், பள்ளிகளுக்கு இடையே நடந்த குறுமைய அளவிலான கால்பந்து போட்டியில், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசை தட்டி சென்றனர். இந்த இரு விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டும் வகையில், பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர்கள் ராகவன், ரெஜினா ஆகியோர் உடனிருந்தனர்.