பதவி உயர்வு வழங்கிய பிறகு கலந்தாய்வு நடத்த கோரிக்கை
கோவை; தொடக்கக் கல்வித் துறையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பணிநிரவல் கலந்தாய்வை, ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகு நடத்த வேண்டும் என, தொடக்க பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் அரசு கூறியதாவது:2025-2026ம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்காக, ஆயிரக்கணக்கான தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடக்க கல்வித் துறையில் எந்தவொரு பதவி உயர்வும் வழங்கப்படவில்லை.தற்போது உள்ள காலி பணியிடங்களில், பெரும்பான்மையானவை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி தலைமையாசிரியர் பணியிடங்களாகவே உள்ளன.இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. பல ஒன்றியங்களில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். ஆனால், காலிப்பணியிடங்கள் இருந்தும் பதவி உயர்வு வழங்கப்படாததால், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி, அதன் பிறகு ஏற்படும் காலிப் பணியிடங்களை வைத்தே மாறுதல் கலந்தாய்வும், பணிநிரவல் கலந்தாய்வும் நடத்த வேண்டும். அதன்பின் புதிய இடைநிலை ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.