உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருத்திய ஓய்வூதியம் வழங்கணும்! ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் கோரிக்கை

திருத்திய ஓய்வூதியம் வழங்கணும்! ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் கோரிக்கை

பொள்ளாச்சி : 'தமிழகத்தில், 2016ம் ஆண்டுக்கு முன் ஒய்வு பெற்ற அரசு ஓய்வூதியர்களுக்கு, மத்திய அரசு வழங்குவது போல திருத்திய ஓய்வூதியம் அனுமதிக்க வேண்டும்,' என, ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொள்ளாச்சி கிளை ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின், 25ம் ஆண்டு விழா, பொதுக்குழு ராஜாமில் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. நிர்வாகி ராஜகோபால் வரவேற்றார். செயலாளர் சண்முகவேல் ஆண்டறிக்கை வாசித்தார். தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். பொருளாளர் நஞ்சுராஜ், வரவு, செலவு அறிக்கை வாசித்தார். துணைத்தலைவர் தேவராஜ், தீர்மானங்களை படித்தார். இணைச்செயலாளர் மோகனன், தீர்மானங்கள் குறித்து பேசினார். மாவட்டத்தலைவர் தண்டபாணி, மாவட்டச்செயலாளர் ஆரோக்கியசாமி, மாவட்ட பொருளாளர் மணி, மாவட்ட துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர். முன்னாள் மாநிலத்தலைவர் ரங்கராஜ், சங்கத்தின் வாயிலாக, கோரிக்கைகளை அரசுக்கு கொண்டு சென்று தீர்வு கிடைப்பது குறித்து பேசினார். கூட்டத்தில், 2016ம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களுக்கு, மத்திய அரசு வழங்குவது போல திருத்திய ஓய்வூதியம் அனுமதிக்க வேண்டும். 70 வயது முதிர்ந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம், 10 சதவீதம் அனுமதிக்க வேண்டும். கம்முடேசன் பிடித்தம் செய்வதை, 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் குப்புசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ