அத்தியாவசிய பணி பட்டியலில் துாய்மைப்பணி; தன்னார்வ அமைப்பினர் எதிர்பார்ப்பு
- நமது நிருபர் -'துாய்மைப்பணியை, மருத்துவப்பணி போன்று, அத்தியாவசிய பணிகளின் பட்டியலில் இணைக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெருகி வரும் மக்கள் தொகை, குடியிருப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சுகாதாரப்பிரச்னை என்பது, பெரும் சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது. திருப்பூர் மாநகராட்சி உட்பட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில், துாய்மைப்பணி, முழு அளவில் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால், நோய் தொற்று, சுகாதார கேடு உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. வீடு, ஓட்டல், வணிக நிறுவனங்களில் இருந்து, தினசரி வெளியேறும் டன் கணக்கிலான குப்பையை வெளியேற்ற உள்ளாட்சி நிர்வாகங்கள் ஒரு புறம் திணறிக் கொண்டிருக்க, மறுபுறம் மக்களிடம் இருந்து குப்பையை தரம் பிரித்து வாங்கி, அவற்றை மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரிக்கும் பணியை, சில தன்னார்வ அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், குப்பை பிரச்னை என்பது, திருப்பூர் மட்டுமின்றி, மாநிலம் முழுக்க பெரும் சவாலான விஷயமாக மாறியுள்ளது. மருத்துவத்துறை போன்று, சுகாதாரப்பணியையும் அத்தியாவசிய தொழில்களின் பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற யோசனை எழுந்துள்ளது. இது குறித்து, துப்புரவாளன் அறக்கட்டளை நிர்வாகி பத்மநாபன் கூறியதாவது: வீதி, தெருக்களில் கிடக்கும் குப்பை, சாக்கடையில் தேங்கி நிற்கும் கழிவுநீர் ஆகியவற்றால் தான் நோய் பரவுகிறது. இதை குணப்படுத்த வேண்டிய பணியை மருத்துவ மற்றும் சுகாதாரத்துறையினர் மேற்கொள்கின்றனர். தினசரி குப்பை அகற்றுவது, குப்பை தேங்காமல் பார்த்துக் கொள்வது உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தும் போது, நோய் பரவல் மற்றும் சுகாதாரகேடு தவிர்க்கப்படும். மருத்துவ மற்றும் சுகாதாரக் குழுவினருக்கான நெருக்கடியும் குறையும். எனவே, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை போன்று, ஊரக, நகர உள்ளாட்சி அமைப்புகளில் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை பணிகளையும் அத்தியாவசிய பணிகளின் பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.