கபடி போட்டியில் கில்லி போல் விளையாடிய பள்ளி மாணவர்கள்
கோவை; தியாகி என்.ஜி., ராமசாமி நினைவு விளையாட்டு கழகம் சார்பில் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான, 29ம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது; வரும், 20ம் தேதி நிறைவடைகிறது. கோ-கோ, கபடி, பூப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளில், 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.இதில், 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கோ-கோ போட்டியில், டி.என்.ஜி.ஆர்., நினைவு மேல்நிலைப் பள்ளி அணி, 11-4 என்ற புள்ளிகளில் ஆதித்யா மெட்ரிக் பள்ளி அணியையும், வெங்கடலட்சுமி மெட்ரிக் பள்ளி அணி, 9-8 என்ற புள்ளிகளில் கலைமகள் மெட்ரிக் பள்ளி அணியையும் வென்றன.புனித ஜான் போஸ்கோ அணி, 10-4 என்ற புள்ளிகளில் எஸ்.என்.வி., மெட்ரிக் பள்ளி அணியையும் வென்றன. பெண்களுக்கான போட்டியில், விவேக் வித்யாலயா அணி, 13-11 என்ற புள்ளிகளில் கீதாஞ்சலி பள்ளி அணியையும், ஜெயந்திர சரஸ்வதி பள்ளி அணி, 16-15 என்ற புள்ளிகளில் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பள்ளி அணியையும் வென்றன.அதேபோல், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில், ஜி.ஆர்.ஜி., மெட்ரிக் பள்ளி அணி, 39-9 என்ற புள்ளிகளில் வெள்ளலுார் அரசுப் பள்ளி அணியையும், கிரசன்ட் மெட்ரிக் பள்ளி அணி, 34-15 என்ற புள்ளிகளில் வெங்கடலட்சுமி பள்ளி அணியையும் வென்றன.காரமடை அரசுப் பள்ளி அணி, 38-11 என்ற புள்ளிகளில் பி.வி.பி., பப்ளிக் பள்ளி அணியையும், டி.என்.ஜி.ஆர்., பள்ளி அணி, 23-21 என்ற புள்ளிகளில் சபர்பன் பள்ளி அணியையும், கே.கே. நாயுடு பள்ளி அணி, 52-17 என்ற புள்ளிகளில் கலைமகள் பள்ளி அணியையும் வென்றன. தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.