| ADDED : ஜன 27, 2024 12:07 AM
கோயமுத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம் (காட்சியா) செயற்குழு உறுப்பினர் பிரேம்குமார் பாபு கூறியதாவது:மனிதக் கழிவை, மனிதர்களே அகற்றும் செயலில் இனியும் பலர் ஈடுபட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர். இதில் பலர் விஷ வாயு தாக்கி இறக்கின்றனர். இந்நிலையை மாற்றவே பயோ டைஜஸ்டர் முறையிலான செப்டிக் டேங்க்குகள் சந்தைக்கு புதிதாக வந்துள்ளன.பழைய செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் முறையில், 30 சதவீத கழிவுகள் வெளியேற்றப்படும். மீதமுள்ள கழிவுகள் டேங்க்கினுள் தங்கிவிடும். தற்போது வந்துள்ள இப்புதிய முறை பயோ டை ஜஸ்டர் நிரப்பப்பட்டுள்ள பாக்டீரியா நுண்ணுயிர்கள், கழிவுகளை மக்கச் செய்து அவற்றை மறு உபயோகத்துக்காக துாய்மையான நீராகவும், மீத்தேன் வாயுவாகவும் மாற்றி வெளியேற்றும்.பழைய முறை கழிவு அகற்றும் முறையானது, சுற்றுச்சூழலைப் பாதிப்பதுடன் நிலத்தடி நீரும் மாசுபடும். அதனால் நோய் பரவ வாய்ப்புகளும் உள்ளது. புதிதாக வந்துள்ள பயோ டை ஜஸ்டர் முறையானது, சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, தண்ணீர் சிக்கனத்துக்கும் உதவுகிறது. இந்த டேங்க்கை இயக்க மின் சக்தியோ, எரிபொருளோ தேவையில்லை.கழிவுகளை சுத்திகரிக்கும் பாக்டீரியாக்களை ஒரு முறை செலுத்தினால் போதும். அவை செயல்படத் தொடங்கும். அந்த பாக்டீரியா 6 முதல் 8 மணி நேரத்திற்குள் இரட்டிப்பாகத் தன்னை பெருக்கி கொள்ளும்.மேலும் டேங்கில் அடைப்பு ஏற்படுவது, தொற்றுநோய் பரவுவது தவிர்க்கப்படுகிறது. இந்த டேங்கை பராமரிப்பது எளிதாகும். இதிலிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்பட்ட நீரில் துர்நாற்றம் இருக்காது. இதை அமைக்க சிறிய இடம் இருந்தால் போதும்.இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.,) வாயிலாக, தொழில்நுட்ப அங்கீகாரம் பெற்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டேங்கின் விலை சாதாரண செப்டிக் டேங்க் விலையைக் காட்டிலும் குறைவானது தான். ஏராளமான இடங்களில் இவ்வகை டேங்க்குகள் பொருத்தப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.