அரசுப்பள்ளிகளில் தொடர் திருட்டு: காவலர்களை நியமிக்க கோரிக்கை
கோவை: அரசுப் பள்ளிகளில் உள்ள உடமைகளை பாதுகாக்கவும், வெளி நபர்களின் அத்துமீறல்களைத் தடுக்கவும், பள்ளிகளுக்கு பகல் நேரக் காவலர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. அரசுப் பள்ளிகளில் காவலர்கள் இல்லாததால், பள்ளிகளில் உள்ள பொருட்கள் திருட்டுபோவதும், சேதப்படுத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறைகளில், வெளிநபர்கள் பள்ளிக்குள் நுழைந்து கழிவறைகளை பயன்படுத்துவது, சுவர்களில் கிறுக்குவது, தகவல் பலகைகளை சேதப்படுத்துவது போன்ற சம்பவங்கள், தொடர்ந்து நடைபெற்று வருவதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும், அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அல்லது அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த உள்ளூர் நபர்களாக உள்ளனர். ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'அண்மையில் மாநகராட்சி பள்ளிகளில் பகல் நேரக் காவலர்களை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது போல், அரசு பள்ளிகளிலும் காவலர்களை நியமிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.