கோவை : உக்கடம் புல்லுக்காடு மைதானத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள சுவர்களில், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஓவியர்கள், கோவை மக்களின் வாழ்வியலை ஓவியமாக வரைந்து வருகின்றனர்.'ஸ்ட்ரீட் ஆர்ட்' அமைப்பினர், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சாதாரண மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு சென்று, அங்குள்ள சுவர்களில், அவர்களின் வாழ்வியலை மையப்படுத்தி, தத்ரூபமாக ஓவியங்கள் வரைகின்றனர்.உக்கடம் புல்லுக்காடு மைதானத்தில், நகர்ப்புற வாழ்விட வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு அடித்தட்டு மக்கள் வசிக்கின்றனர். இதற்கு முன், கோவையை சேர்ந்த ஓவியர் ஜீவா மற்றும் பிரான்ஸ் நாட்டு ஓவியர்கள் பலரும் இணைந்து, ஓவியங்கள் வரைந்தனர். அது, கோவை மக்களை ஆச்சரியப்படுத்தியது.தற்போது சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் இருந்து ஓவியர்கள் வருகை தந்துள்ளனர். இவர்களுடன் இந்திய ஓவியர்கள் இணைந்து, ஓவியம் வரைய ஆரம்பித்திருக்கின்றனர். 42 அடி உயரம் மற்றும், 42 அடி அகல சுவற்றில் ஓவியம் வரையப்படுகிறது. முதல்கட்டமாக, மெஸ் ஒன்றில், ஒரு வாழை இலையில், ஊத்தப்பம், இட்லி பொடி, உளுந்த வடை இருப்பது போலவும், ஒருவர் டீ ஆற்றுவது போலவும், கண்ணாடி டம்ளரில் டீ இருப்பது போலவும் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. அந்த சுவரின் மற்றொரு புறத்தில், ஓவியத்தின் மீதமுள்ள பகுதியை வரைய இருக்கின்றனர்.இவர்களுக்கு தேவையான உதவி மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை செய்து வரும் ஓவியர் ஜீவா கூறுகையில், ''ஸ்ட்ரீட் ஆர்ட் அமைப்பினர், சாதாரண மனிதர்கள் வாழும் பகுதிகளில், ஓவியங்கள் வரைகின்றனர். மனிதர்களின் வாழ்வியலை மையப்படுத்தி, ஓவியம் வரையப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள ஓவியர்கள், கோவையை சுற்றிப்பார்த்து, அவர்களை ஈர்க்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி, கரு உருவாக்கி, ஓவியம் வரைகின்றனர். இம்முறை மூன்று சுவர்களின் ஓவியம் வரைய உள்ளனர்,'' என்றார்.