500 பனை விதைகள் நடும் சமூக பணி
கோவை; வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ், மாணவர்கள் பாப்பம்பட்டி கிராமத்தில் உள்ள ஏரியில், 500 பனை விதைகளை நட்டு, சமூக பணியில் ஈடுபட்டனர். நடப்பு கல்வியாண்டிற்கான நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஒரு பகுதியாக, 'டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின் பங்கு' என்ற தலைப்பில், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவர்கள், ஏழு நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாம்களில், தூய்மை பணிகள் போன்ற சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சமூக பணியில், பள்ளியின் தலைமையாசிரியர் செந்தில்குமார் தலைமையில், பிளஸ் 1 வகுப்பை சேர்ந்த 25 மாணவர்களும், பிளஸ் 2 வகுப்பை சேர்ந்த 3 மாணவர்களும் பங்கேற்றனர்.