வனத்திற்குள் நுழைந்தால் கடும் நடவடிக்கை! சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
வால்பாறை: ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தால், சுற்றுலா பயணியர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும், என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வால்பாறை உள்ளது. தற்போது மழைப்பொழிவு குறைந்து குளுகுளு சீசன் நிலவுவதால், சுற்றுலா பயணியர் வருகையும் அதிகரித்துள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரிகள் தொடர் விடுமுறையால், சுற்றுலா பயணிர் குடும்பத்துடன் அதிகம் வரத்துவங்கியுள்ளனர்.இந்நிலையில், வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் செயல்படும் ரிசார்ட்கள், விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணியரை, இரவு நேரங்களில் வனவிலங்குகளை காணலாம் எனக்கூறி, வாகனங்களில் வனப்பகுதிக்குள் அத்துமீறி அழைத்து செல்கின்றனர்.இதனால், வால்பாறையில் மீண்டும் வனவிலங்கு - மனித மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறைக்கு வரும், சுற்றுலா பயணியர் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையக்கூடாது. ஆழியாறிலிருந்து வால்பாறை வரும் வழியில் உள்ள மலைப்பாதையில் தென்படும் வனவிலங்குகளுக்கு உணவு வழங்கவோ, துன்புறுத்தவோ கூடாது.சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி சமையல் செய்யவோ, உணவு அருந்தவோ கூடாது. யானைகள் நடமாடும் பகுதிக்கு சென்று புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.வால்பாறையில் உள்ள ஆறு, நீர்வீழ்ச்சி உள்ளிட்ட ஆபத்தான இடங்களில் நின்று 'செல்பி' எடுப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மீறினால், வனஉயிரின பாதுகாப்பு சட்டப்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கூறினர்.