கோவை: கோவை தபால் கோட்டத்தில், ஓய்வூதியதாரர்கள், வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர் வாயிலாக சமர்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள், நவ. 1 முதல் தங்கள் உயிர் வாழ் சான்றிதழை சமர்பிக்கும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை தபால் கோட்டத்தில் ஓய்வூதியதாரர்கள், வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை, தபால்காரர்கள் வாயிலாக சமர்பிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி' ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, தபால்காரர்கள் வாயிலாக பயோமெட்ரிக் அல்லது பேஸ் ஆர்டி ஆப்' முறையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழ் சமர்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக தபால்காரரிடம் ரூ.70 செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள், தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பி.பி.ஓ., எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விபரங்களை தெரிவித்து, கை விரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்பிக்க முடியும். கடந்தாண்டில், இந்திய தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி வாயிலாக, கோவை தபால் கோட்டத்தில், 8,055க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள், டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழை, தபால் காரர்கள் வாயிலாக சமர்ப்பித்துள்ளனர். தமிழக தபால் வட்டத்தில் உள்ள 11 ஆயிரத்து 800 தபால் நிலையங்களில் பணிபுரியும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால்காரர்கள் வாயிலாக, இந்த சேவையை பெற முடியும். இதை பயன்படுத்திக் கொள்ள, கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.