பள்ளி பஸ் தகுதிச்சான்றிதழ் வழங்குவதில் திடீர் சிக்கல்
புதிய கல்வியாண்டு துவங்கும் முன் பள்ளி பஸ் தகுதிச்சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் பரிசோதனை துவங்கிய நிலையில், திருப்பூரில் பஸ்களை நிறுத்தி ஆய்வு செய்வதற்கான இடத்தை வட்டார போக்குவரத்து துறையினர் தேடி வருகின்றனர்.வரும் 2025 - 2026ம் கல்வியாண்டு, ஜூன் முதல் வாரம் துவங்க இருக்கிறது. அதற்கு முன்பு, பள்ளி பஸ்கள் ஆய்வு செய்யும் பணி, பிற மாவட்டங்களில் துவங்கப்பட்டுள்ளது. ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, தெற்கு, தாராபுரம், உடுமலை ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் வாயிலாக, இன்னும் பள்ளி பஸ் ஆய்வுக்கான தேதி விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.திருப்பூரில் உள்ள இரண்டு ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கும் போதிய அளவில் மைதான, இடவசதி இல்லாததால், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் இதற்கு முந்தைய ஆண்டுகளில் பள்ளி பஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.நகரின் பல்வேறு பகுதியில், மாவட்டம் முழுதும் இருந்தும் பஸ்கள் சிக்கண்ணா கல்லுாரிக்கு வந்து சேர்ந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.இதனால், நடப்பாண்டுக்கான பள்ளி பஸ் ஆய்வு, தகுதிச்சான்றிதழ் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் உள்ளது - நமது நிருபர் -.