கோடை மழை பொழிவால் துளிர்விடும் தேயிலை
வால்பாறை; வால்பாறையில் தொடர்ந்து பெய்யும் கோடை மழையால், தேயிலை செடிகள் துளிர் விட்டு, உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறையில் பல்வேறு எஸ்டேட்களில், மொத்தம், 32,825 ஏக்கரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில், தேயிலை மட்டும், 25,253 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.இங்குள்ள, சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில், மொத்தம், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் தேயிலை துாள், கோவை, குன்னுார், கொச்சி போன்ற ஏலமையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக, வால்பாறையில் மழைப்பொழிவு இல்லாமல், வெயில் நிலவியதால் தேயிலை செடிகளுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க சில எஸ்டேட்களில் செடிகளை குளிர்வூட்டும் வகையில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக, இடையிடையே கோடை மழை பரவலாக பெய்கிறது. இதனால், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விட துவங்கியுள்ளன.தோட்ட அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறையில் நிலவும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், கடந்த நான்கு மாதங்களாக தேயிலை செடிகள் துளிர்விடாமல் இருந்தன. தேயிலை உற்பத்தி குறைவால் தற்காலிக தொழிலாளர்களும் வேலை இழந்தனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக வால்பாறையில் பரவலாக பெய்யும் கோடை மழையால், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளது. கோடை மழையின் போது தேயிலை செடிகளை தாக்கும் கொசுக்களை ஒழிக்க பூச்சிக்கொல்லி மருந்தும் அவ்வப்போது தெளிக்கப்படுகிறது.இவ்வாறு, கூறினர்.