கோவை:நமது நாட்டில், தொழில்நுட்ப ஜவுளிக்கான தேவைகள் அதிகரிக்கும், என, தமிழ்நாடு ஜவுளித்துறை செயலர் தர்மேந்திர பிரதான் யாதவ் பேசினார்.கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஜென்னி கிளப்பில், இரண்டு நாள் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு மற்றும் நேரடி பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், மாநில கைவினை, கைத்தறி, காதி துறைகள், சிட்ரா, பி.எஸ்.ஜி.,தொழில்நுட்ப கல்லுாரி சார்பில் கருத்தரங்கு நடக்கிறது. நிகழ்ச்சியை துவக்கி வைத்து, தமிழ்நாடு ஜவுளித்துறை செயலர் தர்மேந்திர பிரதான் யாதவ் பேசுகையில், கழிவு பொருட்களிலிருந்து, பயனுள்ள பொருட்கள் செய்யும் காலமாக இது மாறியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி, பன்னோக்கு துறை முன்னேற்றமாக உள்ளது. வந்தே பாரத் ரயில்கள், விமான நிலையங்களின் எண்ணிக்கை உயர்வு, சுற்றுலா, போக்குவரத்து துறை வாகனங்கள் போன்றவை அதிகரித்து வருகின்றன. இவற்றிற்கு மட்டுமின்றி, நவீனமடைந்து வரும் விவசாயத்துக்கும், தொழில்நுட்ப ஜவுளி பயனுள்ளதாக இருக்கும். ஜவுளித்துறையில் இந்தியாவின் சர்வதேச பங்களிப்பு, போதுமானதாக இல்லை. ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே, தொழில்முனைவோர் தொழில்நுட்ப ஜவுளியில் கவனம் செலுத்தி உற்பத்தியை உயர்த்தலாம். தொழில்நுட்பம் மட்டுமின்றி, தொழில்பயிற்சி, நிதியுதவி, கடனுதவிகளையும் அரசு வழங்கி வருகிறது, என்றார். விழாவில், தமிழ்நாடு துணி நுால் துறை கமிஷனர் வள்ளலார், சிட்ரா தலைவர் பிரகாஷ் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தொழில்நுட்ப ஜவுளி, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சி இன்று நிறைவு பெறுகிறது.