உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுக்கு வீதிகளில் ரோட்டை சீரமைக்க ரூ.219.72 கோடி கேட்கிறது மாநகராட்சி

குறுக்கு வீதிகளில் ரோட்டை சீரமைக்க ரூ.219.72 கோடி கேட்கிறது மாநகராட்சி

கோவை: கோவையில், 3,141 எண்ணிக்கையிலான, 417.37 கி.மீ., சாலைகளை சீரமைக்க ரூ.219.72 கோடி கேட்டு, தமிழக அரசுக்கு மாநகராட்சி அறிக்கை அனுப்பியுள்ளது. கோவை மாநகராட்சி பராமரிப்பில், 3,236.96 கி.மீ., சாலைகள் உள்ளன. இதில், 2,659.67 கி.மீ., தார் சாலை; 258.88 கி.மீ., மண் சாலை; 294.05 கி.மீ., சிமென்ட் சாலைகள் உள்ளன. பாதாள சாக்கடை, குடிநீர் குழாய், காஸ் குழாய், தொலைபேசி ஒயர் மற்றும் மின் புதைவடம் பதிப்பதற்காக ரோடு தோண்டப்பட்டதால், குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. அவற்றை சீரமைக்கும் பணியில், மாநகராட்சி துரித கதியில் ஈடுபட்டு வருகிறது. சட்டசபை தேர்தல் முடியும் வரை ரோட்டை தோண்டக் கூடாதென, அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது. செம்மொழி பூங்காவை ஆய்வு செய்ய, முதல்வர் ஸ்டாலின் வந்திருந்தபோது, சாலை சீரமைப்பு சம்பந்தமாக கேள்வி எழுப்பினார். நிதி பற்றாக்குறையை அதிகாரிகள் சுட்டிக்காட்டியதும் மேலும், ரூ.200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கினார். டெண்டர் கோரப்பட்டு சாலைகள் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இருப்பினும் கூட, ஒவ்வொரு வார்டிலும் பாதாள சாக்கடை மற்றும் 24 மணி நேர குடிநீர் திட்டத்துக்காக, தோண்டப்பட்ட குறுக்கு வீதிகள் இன்னும் சீரமைக்கப்படாமல் இருக்கின்றன. அதற்கும் நிதி தேவைப்படுகிறது. மண் சாலையை தார் ரோடாக மாற்றுவது; மிகவும் மோசமாக உள்ள சாலைகள் மற்றும் கான்கிரீட் சாலைகள் போட வேண்டிய பகுதிகள் எவை என பட்டியலிட்டு, மதிப்பீடு தயாரித்து அனுப்ப, தமிழக அரசு கோரியது. அதன்படி, வார்டு வாரியாக எந்தெந்த வீதிகளில், குறுக்கு ரோடு சீரமைக்க வேண்டுமென பட்டியலிடப்பட்டது. தற்போதைக்கு 3,141 எண்ணிக்கையில், 417.37 கி.மீ., நீளத்துக்கு ரோடு போடுவதற்கு, ரூ.219.72 கோடி தேவையென, தமிழக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகத்துக்கு மாநகராட்சியில் இருந்து, அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''ரோடு போடுவதற்கு மேலும் ரூ.220 கோடி கேட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். நிதி ஒதுக்கியதும், மீதமுள்ள ரோடு போடப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை