உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொறியியல் பிரிவில் பைல் காணவில்லையாம்! நகராட்சி கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

பொறியியல் பிரிவில் பைல் காணவில்லையாம்! நகராட்சி கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

பொள்ளாச்சி, ; 'பொள்ளாச்சி நகராட்சி பொறியியல் பிரிவில் எதை கேட்டாலும், 'பைல்' காணவில்லை என்கின்றனர்,' என, கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். பொள்ளாச்சி நகராட்சி சாதாரண கூட்டம்,தலைவர் சியாமளா தலைமையில் நடந்தது. கவுதமன், துணை தலைவர்: ஜோதிநகர் பிரதான சாலையில், சாலையோர வியாபாரிகள் கடைகள் அமைக்க அனுமதித்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். செந்தில்குமார் (தி.மு.க.): கோட்டூர் ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை மற்றும் தனியார் பார் உள்ளதால், மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இங்கு சாலையோர கடைகள் கொண்டு வந்தால் மக்கள் பாதிக்கப்படுவர்.ஜோதிநகர் பகுதியில், தள்ளுவண்டி கடைகள் அமைக்க அனுமதிக்க கூடாது. மாற்று இடங்களை வழங்கலாம். ஜேம்ஸ்ராஜா (அ.தி.மு.க.): தெருநாய்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும். தலைவர்: நகராட்சியில், 1,500 தெருநாய்களுக்கு இதுவரை கருத்தடை செய்யப்பட்டுள்ளது. நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு டாக்டர்கள் இல்லை. உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஜேம்ஸ்ராஜா: ராஜாமில்ரோடு மிக மோசமாக உள்ளன. பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகள் கீழ் இறங்கியுள்ளன. இதை சீரமைத்து ரோடு அமைக்க வேண்டும். தலைவர்: ரோடு போடுவதற்கு முன், மழைநீர் வடிகால் கட்டும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அப்பணி முடிந்ததும் ரோடு பணி மேற்கொள்ளப்படும். பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகள் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். துணை தலைவர்: பொறியியல் பிரிவில் எல்லா பணிகளும் மந்தமாக நடக்கிறது. எதை கேட்டாலும் 'பைல்' காணவில்லை எனக்கூறுகின்றனர். ஜேம்ஸ்ராஜா: ராஜாமில்ரோட்டில், ஆர்ச் அமைத்து கனரக வாகனங்கள் வருவதை தடுக்க பணி ஆணை வழங்கப்பட்டு எட்டு மாதங்கள் ஆகின்றன. இது குறித்து பொறியியல் பிரிவில் கேட்டால் முறையான பதில் இல்லை. 'பைல்' காணவில்லை, தேடுகிறோம் என்கின்றனர். தலைவர்: 'பைல்' காணவில்லை என்ற புகார்கள் அடிக்கடி வருகின்றன. பொறியாளர் இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர்கள் கூறும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். செந்தில்குமார்: ஒப்பந்ததாரர்களை கேட்டால், பொறியாளர் வர வேண்டும் எனக்கூறுகின்றனர். பொறியாளரை கண்டு ஒப்பந்ததாரர்கள் அஞ்சுகின்றனர். நகராட்சி மீன் மார்க்கெட், தேர்நிலையம் மார்க்கெட் உள்ளிட்ட பணிகளை மட்டும் கவனித்தால் போதாது. வார்டுக்குள் நடக்கும் பணிகளையும் கவனிக்க வேண்டும். துணை தலைவர்: காமாட்சி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மழை காலத்தில் பாதிக்கப்படுகின்றனர். டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கவில்லை. தலைவர்: இனி பிரச்னைகள் வராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறியாளர் பிரிவில் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை