உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழங்குடியினர் வயிற்றில் அடிக்கும் வனத்துறை! வேலியே பயிரை மேயும் அவலம் தொடர்வது ஏன்?

பழங்குடியினர் வயிற்றில் அடிக்கும் வனத்துறை! வேலியே பயிரை மேயும் அவலம் தொடர்வது ஏன்?

-நமது நிருபர்-வனத்துறையினர் சிலர், போலி 'பில்'களால் தங்கள் மேம்பாட்டுக்கான வருவாயை அடுத்தடுத்து மோசடி செய்வதால், பழங்குடியினர் விரக்தியில் உள்ளனர்.போளுவாம்பட்டி வனச்சரகத்தின் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, 2009ல் சூழல் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டது. நுழைவு டிக்கெட், வாகன கட்டணம் உள்ளிட்டவைகளால், நாளொன்றுக்கு சராசரியாக, ரூ. 30 ஆயிரமும், சனி, ஞாயிறுகளில், ரூ. 80 - 1 லட்சம் வரையும் வருவாய் உள்ளது.இது, சீசன் சமயங்களில் இரட்டிப்பாகும். இதை கொண்டு, பழங்குடி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி, கட்டமைப்புகளை வனத்துறை மேம்படுத்த வேண்டும்.வருவாயை வேறு பயன்பாட்டுக்கு உபயோகிக்கக்கூடாது. இதுவே விதி. ஆனால், அதை சிதைக்கும் செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன.

2015ல் போலி பில் துவக்கம்...

கடந்த, 2015ல் வன அதிகாரி ரமேஷ் (வனக்காப்பாளர்) மற்றும் ஒரு அதிகாரியின் மகள் இணைந்து, டிக்கெட்டில் போலி 'பில்' தயாரித்து, சுமார், ரூ. 2.50 லட்சம் வரை மோசடி செய்தனர். விசாரணையில் மோசடி உறுதியானது; சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவில்லை.

2017ல் ஊதியத்தில் 'கை'

கடந்த, 2017ல் பழங்குடியினர் ஊதியத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. அதிகாரிகள் விசாரணையில், குறைந்த ஊதியத்தை வழங்கி மோசடி செய்ததும், ஆவணத்தில் வேறு கணக்கு காட்டியதும் தெரிந்தது. அதிகாரிகள் குழு அமைத்து விசாரணை தொடர்ந்தது.

2018ல் வாயில்லா ஜீவன் வயிற்றிலும்...

2018ல் சாடிவயல் 'கும்கி' யானைகளின் உணவுக்காக வாங்கப்படும் பொருட்களுக்கு, போலி 'பில்' தயாரித்தனர். இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியாகி, விசாரணை நடந்தது.அதில், போலி 'பில்' தயாரித்தது உறுதியானது. மேலும், நீர்வீழ்ச்சிக்கு இயக்கப்படும் வாடகை வாகனங்களுக்கு டீசல் போட்டதாகவும் போலி 'பில்'கள் சிக்கின. அப்போதைய வனச்சரகர் சிவா தர்மபுரிக்கு மாற்றப்பட்டார். இதுவும், கண்துடைப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது.

2023ல் மீண்டும் போலி...

அதன் பின், வனச்சரகரான ஆரோக்கியசாமி, 2020, டிசம்பரில் 300 கிலோ சந்தனக்கட்டைகள் பதுக்கிய விவகாரத்தில் சிக்கி, 'சஸ்பெண்ட்' ஆனார். பின்னர், 2021 - 2022 மே வரை, வனச்சரகராக சரவணன் இருந்தார்.இந்நிலையில், கடந்த ஜனவரியில் போலி டிக்கெட் மூலம், ரூ. 58 லட்சம் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், வனச்சரகராக இருந்த சரவணன், வனவர் ராஜேஷ் மற்றும் ஒரு பெண் இணைந்து, மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. அதிகாரிகள் இருவரும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, விசாரணை தொடர்கிறது.இவ்வாறு, இயற்கையின் 'கொடை'யில் கொட்டும் வருவாய், அதிகாரிகளால் 'ஆட்டை' போடப்படுவது தொடர்வதால், பழங்குடியினர் கடும் வேதனையில் உள்ளனர்.இனியாவது, வனமக்களின் வாழ்க்கைத்தரத்தை வனத்துறை மேம்படுத்த வேண்டும் என்பதே, 'தினமலர்' விருப்பம்.

இதுதான் நடந்ததா...?

சம்பவத்தன்று, ஒரு சுற்றுலாப்பயணிக்கு வழங்கிய நுழைவு டிக்கெட்கள் இரு நிறங்களில்(புளூ, கருப்பு) இருந்துள்ளன. அவர் கேள்வி எழுப்பி பிரச்னை செய்துள்ளார். அச்சமயம், ரூ. 8 கோடியில் நடக்கும் 'கும்கி' முகாம் பணிகள் ஆய்வுக்கு வந்த உயர் அதிகாரிகள் விசாரித்துள்ளனர். பின், மிஷின்களை ஆய்வு செய்த போது, போலி டிக்கெட் பயன்படுத்தியது தெரிந்துள்ளது.தொடர் விசாரணையில் தான், அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டது, அம்பலமானதாக புகார் கூறப்படுகிறது. அப்படியெனில், தற்போதைய வனச்சரகர் காப்பாற்றப்பட்டாரா என்ற சந்தேகம் பழங்குடியினர் மத்தியில் எழுந்துள்ளது.இந்த அச்சத்தை போக்க வேண்டியது, வனத்துறை உயர் அதிகாரிகளின் பொறுப்பு மட்டுமல்ல, கடமையும் கூட.

கண்காணிக்க தவறியது ஏன்?

சரவணன் இடமாறுதலான பின், வனச்சரகராக சுசீந்திரநாத் பொறுப்பேற்றுள்ளார். அவர், 8 மாதங்களாக பணியாற்றிய பின்தான், மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதுவரை இவர் டிக்கெட் கவுன்டருக்கு செல்லவே இல்லையா? இரு இயந்திரங்கள்பயன்படுத்தியது இவருக்கு தெரியாமல் போனது ஏன்?இவர் பொறுப்பேற்ற சமயம் கோடைகாலம். பயணிகள் கூட்டம் அதிகம் இருந்திருக்கும். பல இடங்களில் கேமராக்களும் உள்ளன.கூட்டத்தை கணக்கிட்டு, முந்தைய கால சீசன்களுடன் ஒப்பிட்டிருந்தாலே வருவாய் குறைந்திருப்பது தெரிந்திருக்கும். எட்டு மாதங்களாக இவர் என்ன செய்தார் என்ற கேள்வி எழுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி