உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இறைவனை அகத்தில் காணலாம்: பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள் பேச்சு

இறைவனை அகத்தில் காணலாம்: பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள் பேச்சு

அன்னுார்: 'இறைவனை அகத்தில் காணலாம்,' என, அன்னுாரில் நடந்த ஆன்மீக வகுப்பில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் பேசினார்.அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், திருவாசகக் குழு சார்பில், சிவன் அருள் தியானம் மற்றும் மெய்ப்பொருள் ஆராய்ச்சி வகுப்பு நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி வரவேற்றார்.பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் பேசுகையில், ''அப்பரடிகள் பாடுகையில், காற்று, ஆகாசம் என எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான் என்று கூறுகிறார். சோழ நாட்டு கோவில்களில், 100, 500, 1000 கால் மண்டபங்கள் உள்ளன. கோவிலில் இறைவனை தரிசித்த பிறகு இந்த மண்டபங்களில் அமர்ந்து இறைவன் நாமத்தை கூற வேண்டும். கோவிலுக்கு அதிகாலையில் செல்ல வேண்டும். கோவிலில் உழவாரப்பணி செய்ய வேண்டும். தினமும் நமசிவாயா அல்லது சிவாயநம என்னும் மந்திரத்தை சத்தமாக ஏழு முறை, மெதுவாக ஏழு முறை, மனதிற்குள் ஏழு முறை கூற வேண்டும்.வாய்ப்பிருக்கும்போதும் எல்லாம் இந்த நாமத்தை கூற வேண்டும். இறைவன் நம் அகத்தில் உள்ளான். நமக்குள் உள்ள தெய்வீக தன்மையை வெளிப்படுத்த நாம ஜெபம் முக்கியம்.500 ஆண்டுகள் பழமையான பேரூர் மடம் சார்பில் பாழடைந்த பல கோவில்களில் திருப்பணி செய்யப்படுகிறது. இதுவரை மூன்று கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும், என்றார்.ஆன்மீக பேச்சாளர் சரவணன், தியானம், இறைவழிபாடு, நாம ஜெபம் குறித்து பேசினார். திரளான பக்தர்கள், திருவாசகக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Palanisamy T
பிப் 17, 2025 08:05

இந்த உண்மையை குறள் கடவுள் வாழ்த்துப் பாடலில் மிகத் தெளிவாகச் சொல்லபடுகின்றது. "மலர்மிசை ஏகினான் மானடி" சேர்ந்தார் என்ற குறள் அந்த இறைவனைக் குறிப்பிடுகின்றது. நம் நெஞ்சத்தில் குடியிருக்கும் இறைவனை தேடமுடியாவிட்டாலும் நாம் இறைவனை தேடும்முயற்சியில் வேறு பல நல்ல பலன்கள் நம்மை நாடி வருவதை நாம் உணரலாம். இறைநினைவோடு சாதாரண மூச்சுப் பயிற்சியின் மூலம் மனம் கொஞ்சம் அமைதி படுவயதையும் மன அலைச்சலும் இறுக்கமும் குறைவதை நாம் உணரலாம். உடம்பிலும் நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதிலொரு கட்டுப்பாடு இருக்கிறது. சைவ உணவிற்கு நாம் மரியாதை கொடுப்பது அவசியமாகின்றது.