உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 3 மாதத்துக்கான பொருட்கள் ஸ்டாக் இருக்கு; மாநில உணவு ஆணைய தலைவர் தகவல் 

3 மாதத்துக்கான பொருட்கள் ஸ்டாக் இருக்கு; மாநில உணவு ஆணைய தலைவர் தகவல் 

கோவை; மாநில உணவு ஆணையம் சார்பில், மண்டல அளவிலான ஆய்வு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன் தலைமை வகித்து ஆய்வு மேற்கொண்டார். கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த உணவு வழங்கல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். நுகர்வோர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து, ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், அவர் கூறியதாவது: பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான ரேஷன் கார்டுகளை பரிசீலித்து உடனடியாக வழங்கவும், உணவு பொருட்களை ரேஷன் கடைகளுக்கு தடையின்றி சப்ளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. உணவு பொருட்களை, 98 சதவீத பொதுமக்கள் வாங்கியுள்ளனர். நுகர்வோர் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில், 90 சதவீதம் மீது உடனுக்குடன் தீர்வு காணப்பட்டுள்ளது. உணவு துறை என்பதால், தனிக்கவனம் எப்போதும் செலுத்தப்படுகிறது. குறைந்தபட்சம் மூன்று மாதத்துக்கான உணவு பொருட்கள் தயாராக இருப்பு வைக்கப்பட்டுள்ளன. வெளிமாவட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு, உணவு பொருட்கள் வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை. கண்விழி, கைரேகை பதிவில் இருந்த சிக்கல்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார். கலெக்டர் பவன்குமார், மாநில உணவு ஆணைய உறுப்பினர்கள் கணேசன், மதுபாலா, பெரியாண்டவர், கருணாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !