லைட் இருக்கு... கம்பம் இல்லை; மத்திய மண்டல கூட்டத்தில் தமாஷ்
கோவை; மாநகராட்சி மத்திய மண்டல கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம், தலைவர் மீனா தலைமையில், நேற்று நடந்தது. கவுன்சிலர்கள் பேசியதாவது: புலியகுளத்தில் இருந்து சவுரிபாளையம் செல்லும் வழியில், நிறைய ஆக்கிரமிப்புகள் உள்ளன. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். மாநகராட்சி, 67வது வார்டுக்கு நிறைய தெரு விளக்குகள் தந்துள்ளீர்கள். ஆனால், கம்பங்கள் வரவில்லை. வெறும் விளக்குகளை வைத்து என்ன செய்வது? மழைநீர் வடிகால் அடைப்புகளை சரி செய்ய வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் 'சூயஸ்' பணிகள் மெதுவாக நடக்கிறது. ரோடு போட முடியாத நிலையில் உள்ளோம். குடிநீர் குழாய் உடைந்தால், உடனடியாக சரி செய்ய பணியாளர்கள் வருவதில்லை. பழுதான 'பேட்டரி' வாகனங்களை சரி செய்ய தாமதமாவதால், குப்பை தேங்குகிறது. இவ்வாறு, அவர்கள் பேசினர். உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
'பட்டியல் தந்தால் தீர்வு காணப்படும்'
உதவி கமிஷனர் செந்தில்குமரன் பேசுகையில், ''அனைத்து கவுன்சிலர்களும் தங்களது வார்டுகளுக்கு தேவையான தெரு விளக்குகள், கம்பங்கள் குறித்து அட்டவணை கொடுத்தால், மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்து பெற்றுத்தரப்படும். மழைநீர் வடிகால்கள் துார் வாரப்பட்டு வருகின்றன. குடிநீர் கசிவு பிரச்னைகளை, பணியாளர்கள் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்,'' என்றார்.