உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சுகாதார நிலையங்களில் பாதுகாப்பில்லை: காவலர்களை நியமிக்க கோரிக்கை

 சுகாதார நிலையங்களில் பாதுகாப்பில்லை: காவலர்களை நியமிக்க கோரிக்கை

பொள்ளாச்சி: ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக காவலர்கள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், ஒரு வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், இரண்டு கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள்; தெற்கு ஒன்றியத்தில், ஒரு வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், மூன்று கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு, தடுப்பூசி, கர்ப்பகால பராமரிப்பு, நோய்த்தடுப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தவிர, தினமும், 400க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். பாதுகாப்பு கருதி, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தாலும், நோயாளிகளின் வருகை அதிகரிக்கும்போது, பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அரசு மருத்துவமனைகளைப் போல, ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக காவலர்கள் நியமிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் கூறியதாவது: இங்கு, கர்ப்பிணிகள், உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், சுழற்சிமுறையில் இரவுப்பணியிலும் ஈடுபடுகின்றனர். அரசு மருத்துவமனைகளில், தற்காலிக ஒப்பந்த நிறுவனம் வாயிலாக துாய்மைப்பணி, செக்யூரிட்டி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண்டும். இது குறித்து, சுகாதாரத்துறை உயரதிகாரிகள், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்