திருஇருதய பள்ளியில் முப்பெரும் விழா
வால்பாறை: வால்பாறை திருஇருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா, பாராட்டு விழா, கலை விழா என முப்பெரும் விழா, தலைமை ஆசிரியர் கவிதா தலைமையில் நடந்தது. பள்ளிகளின் தாளாளர் ரெஜினாமேரி, திருஇருதய ஆலய பங்கு தந்தை ஜெகன்ஆண்டனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கும், மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கும், ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் டாக்டர் முனுசாமி பரிசு வழங்கினார். விழாவில், கோவை காருண்யா கல்வி நிறுவன பேராசிரியர் ஜிபுதாமஸ், கோவை தனியார் கல்லுாரி நிர்வாக இயக்குனர் ரம்யா மார்கிரேட், அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். பள்ளி, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.