தமிழக கபடி அணியில் இரண்டு மாநகராட்சி பள்ளி மாணவியர்
கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் ஆரம்பம், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என, 148 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் மேம்படவும், விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம்(எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில் கபடி, கோ-கோ உள்ளிட்ட போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்பட உள்ளன. தமிழ்நாடு பெண்கள் கபடி அணிக்கு முதற்கட்டமாக, 63 மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் இருந்து தனித்திறமைகள் அடிப்படையில், 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கோவை மாநகராட்சி ரங்கநாதபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, 12ம் வகுப்பு மாணவி நாகலட்சுமி, 11ம் வகுப்பு மாணவி மோனிஷா ஆகியோர், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தேர்வாகியுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட மாணவியரை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் வாழ்த்தினார். செயற்பொறியாளர் ஹேமலதா, பள்ளி தலைமையாசிரியர் அருளானந்தம், கபடி பயிற்சியாளர் தங்கபாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.