2.5 கிலோ கஞ்சா பறிமுதல் பதுக்கிய இருவருக்கு சிறை
கோவை; மருதமலை சாலையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மருதமலை ரோட்டில் சிலர் கஞ்சா விற்பனைக்காக, பதுக்கி வைத்திருப்பதாக ஆர்.எஸ். புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு இருந்த இருவரிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின், முரணாக பதிலளித்தனர்.இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 2.5 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த செல்வபுரத்தை சேர்ந்த சஞ்சய்குமார், 25 மற்றும் ஒண்டிபுதுாரை சேர்ந்த பால் பீட்டர், 33 ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.