உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலைப்பாதையில் வனவிலங்குகள் உலா சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை

மலைப்பாதையில் வனவிலங்குகள் உலா சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை

வால்பாறை; வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடுவதால், சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும், என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வால்பாறை அமைந்துள்ளது. இங்குள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும் வரையாடு, சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் உள்ளன.இதுதவிர யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. வால்பாறையின் இயற்கையை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், வால்பாறையில் இருந்து, பொள்ளாச்சி செல்லும் மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே வரையாடுகள் அதிக அளவில் முகாமிட்டுள்ளன. இவை சாலையோரங்களில் அடிக்கடி உலா வருகின்றன.இதேபோல், புதுத்தோட்டம் பகுதியில், சிங்கவால்குரங்குகள் ஆபத்தை உணராமல் ரோட்டில் துள்ளி விளையாடுகின்றன. மலைப்பாதையில் அதிவேகமாக வரும் சுற்றுலா வாகனங்களால், வனவிலங்குகளின் உயிருக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறையில் பருவமழைக்கு பின் வனவளம் மிகவும் செழிப்பாக உள்ளது. வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் போதுமான அளவு கிடைக்கிறது. வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், வரையாடுகள், சிங்கவால் குரங்குகள், யானை, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் நடமாடுவதால், இந்தப்பகுதியில் சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை மிக கவனமாக இயக்க வேண்டும். வரையாடு மற்றும் சிங்கவால்குரங்குகளை துன்புறுத்துவது, 'செல்பி' எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ