என்ன கொடுமை சார்! போலீஸ் குடியிருப்பு இருந்த இடத்தில் மருத்துவ கழிவுகள் குவிப்பால் அபாயம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி போலீஸ் குடியிருப்பு பகுதியில், பயன்படுத்திய ஊசிகள், மருந்துகள், குளுக்கோஸ் டியூப் போன்ற மருத்துவ கழிவுகள், திறந்த வெளியில் வீசப்பட்டுள்ளன. அங்கு மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகள் இவற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.மருத்துவ கழிவுகளை திறந்த வெளியில் வீசுபவர்கள் மீது சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷன் பின்பக்கம், இரண்டு ஏக்கர் பரப்பில் போலீஸ் குடியிருப்பு இருந்தது. கட்டடம் வலுவிழந்ததால், போலீசார் குடியிருப்பை காலி செய்தனர். அதன்பின், தமிழ்நாடு காவலர் குடியிருப்பு வீட்டு வசதி வாரியம் வாயிலாக டெண்டர் விடப்பட்டு, கட்டடம் இடிக்கப்பட்டது.கடந்த, 2022ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தில், பொள்ளாச்சியில் போலீஸ் குடியிருப்பு கட்டடம் கட்டப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்தார். கடந்தாண்டு பொள்ளாச்சி போலீஸ் குடியிருப்பு புதியதாக கட்ட அரசு, 76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.அதில், எட்டு இன்ஸ்பெக்டர்கள், 20 எஸ்.ஐ.,க்கள், 194 போலீசார் என மொத்தம், 222 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்காக டெண்டர் பணிகள் இதுவரை துவங்கப்படாமல் உள்ளது. பணிகள் துவங்கப்படாத நிலையில், குடியிருப்பு பகுதி புதர் மண்டி விஷபூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. புதர் சூழ்ந்துள்ளதால், சமூக விரோதிகள், திறந்த வெளி, 'பார்' ஆக மாற்றி மதுபானம் அருந்துதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள், விரும்பத்தகாத செயல்கள் இரவு நேரங்களில் அரங்கேறி வருகின்றன.யாரும் பயன்படுத்தாத இந்த இடம், தற்போது திறந்த வெளியில் மருத்துவ கழிவுகள் கொட்டுமிடமாக மாறியுள்ளது.குப்பையோடு குப்பையாக பயன்படுத்திய ஊசிகள், மருந்துகள், ரத்த பரிசோதனை செய்யப்பட்ட மருத்துவ கழிவுகள், குளுக்கோஸ் ஏற்ற பயன்படுத்தப்படும் டியூப்கள் என பலவிதமான மருத்துவ கழிவுகள், திறந்த வெளியில் வீசப்பட்டுள்ளன.மருத்துவ கழிவுகள் முறையாக அகற்ற, நகராட்சி நிர்வாகம் வாயிலாக மருத்துவமனை, பரிசோதனை மையங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை அதிகாரிகளும், மருத்துவ கழிவுகளை வெளியே வீசாமல், சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திடம் வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.அதையும் மீறி, இதுபோன்று கழிவுகளை வீசிச் செல்வதால் சுகாதார பாதிப்புகள் ஏற்படுகிறது.
கடும் நடவடிக்கை தேவை!
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:போலீஸ் குடியிருப்பு கட்டுமானப்பணி துவங்கப்படாமல் உள்ளதால், தற்போது அந்த இடம் புதர்மண்டி கிடக்கிறது. இதனால், சமூக விரோத செயல்களுக்கு கூடாரமாக மாறியுள்ளது. சமீப காலமாக மருத்துவ கழிவுகளை திறந்த வெளியில் வீசிச் செல்கின்றனர்.இப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு செல்வோர் பாதிக்கின்றனர். நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், ரத்த பரிசோதனை செய்யப்பட்டவை அப்படியே வீசப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.இங்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும் போது, ஊசிகளால் பாதிப்பு ஏற்படும். மருந்துகள் உட்கொள்வதால், அவற்றுக்கு உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இதுபோன்று விதிமுறை மீறி கழிவுகளை கொட்டுவோர் மீது அபராதம் விதிப்பு உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மருத்துவ கழிவுகளை வீசுவோரை கண்காணித்து போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.