மகளிர் கூடைப்பந்து போட்டி: பி.எஸ்.ஜி., கல்லுாரி சாம்பியன்
கோவை: பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி முதல் பரிசை வென்றது.பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில் பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் இரு நாட்கள் நடந்தது. 18 அணிகள் பங்கேற்ற இப்போட்டி, 'லீக்' முறையில் நடத்தப்பட்டது.மூன்றாவது போட்டியில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி, 71-23 என்ற புள்ளி கணக்கில் பாரதியார் பல்கலை அணியை வென்றது. நான்காவது போட்டியில் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரி அணி, 65-60 என்ற புள்ளி கணக்கில் கே.பி.ஆர்., கல்லுாரி அணியை வென்றது.ஐந்தாவது போட்டியில், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரி அணி, 68-39 என்ற புள்ளி கணக்கில் பாரதியார் பல்கலை அணியை வென்றது. ஆறாவது போட்டியில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி, 66-38 என்ற புள்ளிக் கணக்கில் கே.பி.ஆர்., கல்லுாரி அணியை வென்றது.போட்டிகளின் நிறைவில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி முதலிடத்தையும், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி இரண்டாம் இடத்தையும், கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி மூன்றாம் இடத்தையும், பாரதியார் பல்கலை நான்காம் இடத்தையும் பிடித்தன.வெற்றி பெற்ற அணிகளுக்கு, பாரதியார் பல்கலை உடற்கல்வி இயக்குனர்(பொ) ராஜேஸ்வரன் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினார். பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி செயலாளர் கண்ணய்யன், முதல்வர் பிருந்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.