காப்பகத்தில் வாலிபர் கொலை; 11 பேர் ஜாமின் மனு டிஸ்மிஸ்
கோவை; பொள்ளாச்சி காப்பகத்தில், வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 11 பேரின் ஜாமின் மனு 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.கோவை மாவட்டம், சோமனுாரை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் மகன் வருண்காந்த், 22; மனநலம்பாதிக்கப்பட்ட இவர், பொள்ளாச்சி முல்லை நகரில் உள்ள, 'யுதிரா சாரிடபிள் டிரஸ்ட்' என்ற தனியார் காப்பகத்தில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். வருண்காந்த் அங்குள்ளவர்கள் பேச்சைக் கேட்காமல் தகராறு செய்ததால், மே 12ல் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில், வருண்காந்த் உயிரிழந்தார்.சடலத்தை காப்பக நிர்வாகியின் தோட்டத்தில் புதைத்து, காணாமல் போய் விட்டதாக புகார் கொடுத்து நாடகமாடினர். மகாலிங்கபுரம் போலீசார் விசாரிக்கையில், வருண்காந்த் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.காப்பக நிர்வாகிகள் டாக்டர் கவிதா, இவரது கணவர் லட்சுமணன், மகள்கள் சுருதி, ஸ்ரேயா, பணியாளர்கள் கிரிராம், ஷாஜி, நித்திஷ், ரங்கநாயகி, சதீஷ், ஷீலா, செந்தில்பாபு ஆகிய, 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமினில் விடுவிக்கக்கோரி, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இவர்களது ஜாமின் மனுக்களை 'டிஸ்மிஸ்' செய்து, நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.