விவசாயி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கல்
விருத்தாசலம்: மின்சாரம் தாக்கி பலியான விவசாயி குடும்பத்துக்கு, ஸ்டேட் பாங்க் சார்பில் 20 லட்சம் ரூபாய் தனிநபர் விபத்து காப்பீடு தொகை வழங்கப்பட்டது.ஸ்டேட் பாங்க் வாடிக்கையாளர்கள் ஆண்டுதோறும் 1,000 ரூபாய் செலுத்தி, 20 லட்சம் ரூபாய் தனிநபர் காப்பீடு பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி, விருத்தாசலம் அடுத்த வன்னாங்குடிகாடு கிராமத்தை சேர்ந்த விவசாயி திருநாவுக்கரசு மகன் பிரபு என்பவர், கருவேப்பிலங்குறிச்சி ஸ்டேட் பாங்கில் ஆண்டுதோறும் 1,000 ரூபாய் காப்பீடு தொகை செலுத்தி வந்தார்.சமீபத்தில், மின்சாரம் தாக்கி பிரபு உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் தனிநபர் காப்பீடு தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, வங்கி மேலாளர் சுவாமி அம்மாள் தலைமை தாங்கினார். அதில், விவசாயி பிரபுவின் மனைவி ஜானகி மற்றும் குடும்பத்தினரிடம் 20 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.