| ADDED : மே 24, 2024 03:48 AM
கடலுார்: சிதம்பரம் பகுதி ரேஷன் கடைகளில் விநியோகிக்க நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு வந்த 90 டன் துவரம் பருப்பு தரமில்லாததால் அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்தனர்.கடலுார் மாவட்டத்தில் உள்ள 7.89 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1,416 ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில், அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் மானிய விலையில் வழங்கப்படுகிறது.இந்நிலையில் லோக்சபா தேர்தல் காரணமாக இந்தாண்டிற்கான துவரம் பருப்பு கொள்முதல் செய்வதில் காலதாமதமாகியது. இதனால், ரேஷன் கடைகளில் இந்த மாதம் துவரம் பருப்பு வழங்கப்படவில்லை.வெளிச் சந்தையில் துவரம் பருப்பு கிலோ ரூ.180க்கும் விற்கும் நிலையில், ரேஷன் கடையில் மானிய விலையில் ரூ.30க்கு துவரம் பருப்பு வழங்காதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக அரசு, தனியார் நிறுவனங்களில் துவரம் பருப்பை கொள்முதல் செய்து வருகிறது.தமிழக அரசு கொள்முதல் செய்த நிறுவனத்திடம் இருந்து 90 டன் துவரம் பருப்பு லாரியில் சிதம்பரம் நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு வந்தது. துவரம்பருப்பை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், தரமின்றி இருந்ததால், அதனை சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பினர்.