| ADDED : ஜூலை 31, 2024 01:06 AM
விருத்தாசலம்:புதுச்சேரியில் இருந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறைக்கு, 32 ஆயிரம் லிட்டர் ஹைட்ரோ குளோரிக் அமிலம் ஏற்றிய டேங்கர் லாரி நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. லாரியை கள்ளக்குறிச்சியை சேர்ந்த டிரைவர் ராஜதுரை ஓட்டினார். நள்ளிரவு 12:30 மணிக்கு கடலுார் மாவட்டம், விருத்தாசலம் - சேலம் சாலையில், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் அருகே சென்றபோது, டேங்கர் லாரி, சாலை மீடியனில் மோதியது. அதில் லாரி டிரைவர் ராஜதுரை காயமின்றி தப்பினார்.எனினும், அந்த லாரியிலிருந்து நேற்று பகல் 12:15 மணிக்கு 'ஹைட்ரோ குளோரிக்' ஆசிட் கசிந்து வௌியேறியது. இதனால், அப்பகுதி மக்களுக்கும், அவ்வழியே சென்றவர்களுக்கும் மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது. அச்சமடைந்த மக்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். மேலும், கொளஞ்சியப்பர் கோவிலில் இருந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டு, கோவில் நடை சாத்தப்பட்டது.தகவலறிந்து வந்த விருத்தாசலம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தண்ணீர் பீய்ச்சி அடித்தும், சுண்ணாம்பு தெளித்து, ஆசிட் வீரியத்தை கட்டுப்படுத்த முயன்றனர். எனினும், முடியவில்லை.அசம்பாவிதத்தை தவிர்க்க, விருத்தாசலம் போலீசார், 2 கி.மீ.,க்கு முன்னதாக சாலை தடுப்புகளை அமைத்து, கடைவீதி வழியாக சேலம் புறவழிச்சாலைக்கு, சேலம் மார்க்கமாக செல்லும் வாகனங்களை திருப்பி விட்டனர்.பகல் 2:30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து மற்றொரு டேங்கர் லாரியை வரவழைத்து, விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து ஆசிட்டை பலத்த பாதுகாப்புடன் மாற்றினர். அதை தொடர்ந்து நிலைமை சீரடைந்தது.