பெண்ணாடம் கோவிலில் தீ வைக்கப்பட்ட உண்டியல்கள் திறப்பு
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் மாணவர்களால் தீ வைக்கப்பட்ட உண்டியலில் 700 ரூபாய் மட்டுமே சேதமாகி இருந்தது.கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தற்போது திருப்பணி நடந்து வருகிறது.நேற்று முன்தினம் மாலை அம்மன் சன்னதி முன் இருந்த 2 உண்டியலில் புகை வந்ததை கண்டு பக்தர்கள் கூச்சலிட்டனர். கோவில் செயல் அலுவலர் மகாதேவி மற்றும் ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.போலீசார் கோவில் அலுவலகத்தில் இருந்த சி.சி.டி.வி., பதிவை ஆய்வு செய்தனர். அதில், தரிசனம் செய்ய வந்த மாணவர்கள் சிலர், சில்வர் மற்றும் இரும்பு உண்டியல்கள் அருகே சென்று பேப்பரில் தீயை கொளுத்தி உண்டியலுக்குள் போட்டு விட்டு, அங்கேயே கும்மாளம் போட்டது தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து, திட்டக்குடி சரக ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, கோவில் செயல் அலுவலர் மகாதேவி முன்னிலையில் நேற்று உண்டியலை திறந்து காணிக்கை எண்ணப்பட்டது.உண்டியலில் காணிக்கை பணம் மொத்தம் ரூ. 49,135 இருந்தது. அதில், 700 ரூபாய் மட்டும் தீயில் கருகியிருந்தது.