| ADDED : ஜூன் 11, 2024 11:23 PM
புவனகிரி தாலுகாவில் ஏழு இடங்களில் சவுடு மணல் குவாரிகள் முக்கியப்புள்ளிகளின் சொந்த பொறுப்பில் இயங்குகிறது.சாலை விரிவாக்க பணிகளுக்கு மணல் அனுப்புவதற்காக இந்த குவாரிகள் துவங்கப்பட்டுள்ளது. தினசரி டிப்பர் லாரிகள் மூலம் சாலை விரிவாக்க பணிகளுக்கு கொண்டு செல்கின்றனர். மேலும் அளவிற்கு அதிகமான யூனிட் மணல் ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் பறக்கின்றனர்.இதனால் சாலையில் விபத்துகள் அதிகரிக்கிறது. மேலும் சாலை விரிவாக்கப்பணிகளுக்கு நாள் ஒன்றிற்கு 3 லோடு என்றால், தனி நபருக்கு 10 லோடு என்ற முறையில் விற்பனை செய்கின்றனர். இதற்காக வருவாய்த்துறையினர், போக்குவரத்துத்துறையினர் மற்றும் போலீசார் என பல்வேறு வகையில் கவனித்து விடுகின்றனர்.இதனால் யாரும் கண்டு கொள்ளாமல் பச்சைக் கொடி காட்டி, பாதுகாப்பாக செயல்படுகின்றனர். இதனால் சாலை விரிவாக்கப்பணி என்ற பெயரில் சவுடு மணல் கூட்டுக் கொள்ளை நடக்கிறது.இதனால் தனிநபர்கள் பல கோடி ரூபாய்க்கு மணல் விற்பனை செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். புவனகிரி தாலுகா அலுவலகத்தில் நியமிக்கப்பட்டவர்கள், குவாரியில் வசூலுக்கு சென்ற இடத்ததில், ஈகோ பிரச்சனை ஏற்பட்டு சமீபத்தில் தாக்கிக் கொண்ட சம்பவமும் அரங்கேறியுள்ளதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.மாவட்ட நிர்வாம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் விருப்பமாக உள்ளது.