உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாட்டியை வெட்டி கொன்ற மனநலம் பாதித்த பேத்தி

பாட்டியை வெட்டி கொன்ற மனநலம் பாதித்த பேத்தி

பெண்ணாடம், : திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் மனநலம் பாதித்த பெண், தனது பாட்டியை மண் வெட்டியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த பேரளையூர், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி புஷ்பவள்ளி. இவர்களுக்கு சிவக்குமார் என்ற மகனும், சிவரஞ்சனி, சிவசத்யா, 25, இரு மகள்கள் உள்ளனர். 10 ஆண்டிற்கு முன் பன்னீர்செல்வம், சிவக்குமார் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். சிவரஞ்சனிக்கு திருமணமாகி விட்டது.சிவக்குமார் இறந்ததால் சற்று மனநலம் பாதித்த சிவசத்யா தனது தந்தை வழி பாட்டி தனலட்சுமியுடனும், தாய் புஷ்பவள்ளி தனியாகவும் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், சிவசத்யா, தனது பாட்டி தனலட்சுமியிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அடிக்கடி தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை மீண்டும் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பாட்டியிடம் தகராறு செய்தார். அதற்கு அவர் பதில் ஏதும் கூறவில்லை. ஆத்திரமடைந்த சிவசத்யா, வீட்டில் இருந்த மண் வெட்டியால் பாட்டி தனலட்சுமியை சரமாரியாக வெட்டிவிட்டு, அதேபகுதியில் வசிக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று விபரத்தை கூறினார்.அதிர்ச்சியடைந்த புஷ்பவள்ளி தனது உறவினர்களுடன் வந்து பார்த்தபோது தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார், மூதாட்டி தனலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, சிவசத்யாவிடம் விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் பேரளையூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை