| ADDED : ஜூலை 13, 2024 10:02 PM
காட்டுமன்னார்கோவில்:கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த பழஞ்சநல்லுார் கிராமத்தில் உள்ள மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இங்கு விருந்து சாப்பிட்ட பலருக்கு நேற்று காலை வாந்தி, பேதி ஏற்பட்டது. வீராணந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தங்கதுரை தலைமையிலான மருத்துவ குழுவினர், பழஞ்சநல்லுார் கிராமத்தில் முகாமிட்டு சிகிச்சை மேற்கொண்டனர்.இதில், 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்ததால், மணமகள் அட்சயா, 20, மனவெளி வாசகி, 42, உட்பட 50க்கும் மேற்பட்டோர், காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். நான்கு பேர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சப் கலெக்டர் ராஷ்மிராணி, மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். முதல்கட்ட விசாரணையில், கெட்டுப்போன உணவு சாப்பிட்டதால் வாந்தி, பேதி ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.