மகாராஷ்டிராவில் இருந்து 2,200 டன் மொலாசஸ் விருதைக்கு சரக்கு டேங்கரில் வருகை
விருத்தாசலம்; மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 2,200 டன் மொலாசஸ், சரக்கு டேங்கரில் விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திறங்கின. மகாராஷ்டிரா மாநிலம், வதோதரா தொழில் வர்த்தக மையத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனத்தில் இருந்து, 2,200 டன் மொலாசஸ், 48 டேங்கர்கள் கொண்ட சரக்கு ரயிலில் நேற்று அதிகாலை, கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தடைந்தது. இங்கிருந்து, விருத்தாசலம் அடுத்த காணாதுகண்டான் கிராமத்தில் உள்ள எஸ்.என்.ஜே., டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட்., ஆலைக்கு, 50க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடந்தது. இதற்காக, தெற்கு ரயில்வே நிர்வாக அனுமதியுடன், சரக்கு இறக்கும் தளத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, காலை 10:30 மணிக்கு சரக்கு டேங்கரில் இருந்த மொலாசஸ், டேங்கர் லாரிக்கு மாற்றும் பணி துவங்கியது. தற்காலிக மின் மோட்டார் மூலம் ராட்சத குழாய்கள் இணைத்து, மொலாசஸ் மாற்றப்பட்டன. இப்பணியை ரயில்வே இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி தலைமையிலான போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்தனர். தனியார் நிறுவன அலுவலர் ஒருவர் கூறுகையில், 'மொலாசஸில் இருந்து எத்தனாலை பிரித்து, பெட்ரோல் மற்றும் டீசலுடன் கலந்து பயன்படுத்தலாம் என பிரதமர் மோடி கூறியதால், விருத்தாசலம் தனியார் ஆலைக்கு இரண்டாவது முறையாக மொலாசஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 25ம் தேதி, 2,500 டன் மொலாசஸ் முதல் முறையாக வந்தன. தற்போது 2,200 டன் மொலாசஸ் இரண்டாவது முறையாக வந்தடைந்தது. வருங்காலங்களில் தொடர்ச்சியாக மொலாசஸ் வர்த்தகம் இருக்கும்' என்றார். 1929ம் ஆண்டு விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷன் துவங்கியதில் இருந்து, சரக்கு ரயிலில் மொலாசஸ் ஏற்றிய டேங்கர்கள் வருவது இது இரண்டாவது முறையாகும்.