கடலுார் மாநகராட்சியில் 47 கொடிக்கம்பங்கள் அகற்றம்
கடலுார் : நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடலுார் மாநகராட்சி பகுதி சாலைகளில் இருந்த 47 கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி நடந்தது.தமிழகம் முழுதும் பொது இடங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி, சமுதாய அமைப்புகளின் நிரந்தர கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது.அதன்பேரில், ஒவ்வொரு மாவட்டங்கள் வாரியாக கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. நேற்று கடலுார் மாநகரில் கொடிக்கம்பங்கள் உள்ள பகுதியை உதவி பொறியாளர் மணிவேல் முன்னிலையில் புதுப்பாளையம், சில்வர் பீச் ரோடு, நெல்லிக்குப்பம் சாலை, தேவனாம்பட்டினம், கோண்டூர், கண்டக்காடு, வண்ணாரப்பாளையம், மஞ்சக்குப்பம், கம்மியம்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்த 47 கம்பங்கள் அகற்றும் பணி நடந்தன. மீதமுள்ள இடங்களில் கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி இன்று தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.