உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீடு புகுந்து ரூ.10 லட்சம் நகைகள் திருட்டு விருத்தாசலத்தில் துணிகரம்

வீடு புகுந்து ரூ.10 லட்சம் நகைகள் திருட்டு விருத்தாசலத்தில் துணிகரம்

விருத்தாசலம்:விருத்தாசலத்தில் வீடு புகுந்து 12 சவரன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்கம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம், பழத்தோட்ட சாலையில் உள்ள கண்மணி நகரை சேர்ந்தவர் அப்துல்ரகுமான், 60; கண்டெய்னர் லாரி டிரைவர். சில நாட்களுக்கு முன் கோவாவிற்கு லாரியில் சென்றார். இவரது மனைவி ஜெரினாபேகம், 47; இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு , வேலுாரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார். நேற்று காலை வீடு திறந்து கிடப்பதாக அருகில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். ஜெரினா பேகம் தகவல் கூறியதன் பேரில், உறவினர்கள் பார்த்தபோது, வீட்டின் முன்கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், வாசல் கதவில் தாழ்ப்பாள் கொக்கியை உடைத்துள்ளனர்.பின், பீரோவை திறந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 12 சவரன் நகைகள், 2 லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடிய தெரிந்தது. , திருடிய வீட்டில் கேமராக்கள் உள்ளதால், அதில் பதிவான காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க்கையும் திருடி சென்றனர். டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்ட போலீசார் சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.அதில், முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர், வீட்டின் முன்புற சுவரை தாண்டிக் குதித்து உள்ளே செல்வதும், கேமராவை மேல் நோக்கி திருப்பி விட்டு, வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். பின்னர், இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் காட்சிகள், எதிர்வீட்டில் உள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.இது குறித்து ஜெரினாபேகம் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பழகிய நபர்கள் திருட வாய்ப்பு

உடல் முழுதும் மறைத்தபடி வந்த மர்ம நபர்கள், கேமராக்களை மேல் நோக்கி திருப்பிவிட்டு, பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்தனர். சிசிடிவி காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க்கை விடவில்லை. இதனால் ஜெரினாபேகத்துக்கு நன்கு அறிமுகமான நபர்கள் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். சமீபத்தில் வீட்டு வேலைக்கு வந்து சென்ற நபர்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !