ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபம்; 10 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் பாழாகும் அவலம்
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட திருமண மண்டபம், பயன்பாட்டிற்கு வராமல், பாழாகி வருகிறது. நெல்லிக்குப்பம் நகராட்சியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆலை ரோட்டில் ரயில் நிலையம் அருகே கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், ரூ.60 லட்சம் மதிப்பில், திருமண மண்டபம் கட்டபட்டது. ஆனால் தற்போது வரை, இந்த மண்டபம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்நிலையில், இந்த மண்டபத்தை, துாய்மை பணியாளர்களுக்கு வேலையை பிரித்து வழங்கும் வார்டு அலுவலகமாக பயன்படுத்த துவங்கி உள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட திருமண மண்டபம், அதிகாரிகள் அலட்சியத்தால் பாழாகி வருகிறது. பல திட்டங்களில், கட்டடங்கள் கட்டுவதற்கு ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்குவதோடு பணி முடிந்ததாக அதிகாரிகள் நினைக்கின்றனர். அதனால், பல திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரா மல், மக்கள் வரிப்பணம் பாழாகி வருகிறது. இதை மக்கள் பிரதிநிதிகளும் கண்டு கொள்வதில்லை. அதனால், கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.