அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
பண்ருட்டி:பண்ருட்டி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறையினர் திடீர் சோதனை நடத்தினர். கடலுார் மாவட்டம், பண்ருட்டி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா, அ.தி.மு.க., மகளிரணி மாநில துணை செயலர். 2016 -- 2021 வரை பண்ருட்டி எம்.எல்.ஏ.,வாக இருந்தார். இவரது கணவர் பன்னீர்செல்வம், 2011 - -2016 வரை பண்ருட்டி நகராட்சி தலைவராக இருந்தார். இவர்கள் இருவரும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக, 2024ல், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கடலுார் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., சத்தியராஜ் தலைமையில் 3 கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று, பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள சத்யா, பன்னீர்செல்வம் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையின்போது, முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா திடீரென மயக்கம் அடைந்ததால், கடலுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.