நடைபாதையில் தடுப்பு கம்பி; பாதசாரிகள் நிம்மதி
விருத்தாசலம் : விருத்தாசலம் பாலக்கரை முணிமுக்தாறு பாலத்தில் உள்ள நடைபாதையில், நகராட்சி சார்பில் தடுப்பு கம்பி அமைப்பதால் பாதசாரிகள் நிம்மதியடைந்துள்ளனர். விருத்தாசலம் பாலக்கரை மணிமுக்தாறு பாலம் வழியாக சேலம், திருச்சி, ஜெயங்கொண்டம், அரியலுார், திட்டக்குடி, ஆண்டிமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.மேலும், பாலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதசாரிகள் அத்தியாவசிய தேவைக்கு தினசரி கடந்து செல்கின்றனர். இந்நிலையில், பாலத்தின் இருபுறமும், நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்ததால், பாதசாரிகள் சாலையின் நடுவே நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.இதனால், பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்குவது தொடர்கதையாக இருந்தது. இதனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் சார்பில், பாதசாரிகள் பாதுகாப்பு கருதி, நடைபாதையில் இருபுறமும், தடுப்பு கம்பிகள் அமைத்துள்ளனர். இதனால், நடைபாதை கடைகள் அகற்றப்பட்டு, பாதசாரிகள் மட்டும் நடக்கும் சூழல் உருவாகியுள்ளது.