மீன்பிடி தடைகாலம் அமல் துறைமுகத்தில் படகுகள் நிறுத்தம்
கடலுார் : தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று துவங்கியதால், மீனவர்கள் படகுகளை கரையோரங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், ஆண்டுதோறும் ஏப்., 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடை செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டிற்கான தடைக்காலம் நேற்று துவங்கியது. கடலுார் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, துறைமுகம், நல்லவாடு, சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், அக்கரைக்கோரி, ராசாப்பேட்டை, சொத்திக்குப்பம், சித்திரைப்பேட்டை உள்ளிட்ட 49 மீனவ கிராம மீனவர் மீன்பிடி தடை காலம் காரணமாக யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகளை கடலுார், கிள்ளை அன்னங்கோவில் உள்ளிட்ட மீன்பிடி துறைமுக பகுதிகள் மற்றும் கடற்கரையோர கிராமங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். மேலும், வலைகள் சீரமைப்பு மற்றும் படகுகள் பழுதுபார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.