காற்றழுத்த தாழ்வு எதிரொலி படகுகள் துறைமுகத்தில் நிறுத்தம்
கடலுார்: கடலுார் மாவட்டத்தில், காற்றழுத்த தாழ்வு எதிரொலி காரணமாக கடந்த 10 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி துவங்கியதை தொடர்ந்து, கடலுார் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 19ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதன்படி, கடந்த 9 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில், வங்கக் கடலில் மீண்டும் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நேற்றும் பத்தாவது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், கடலுார் மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.