பஸ் படியில் பயணம்: கல்லுாரி மாணவர் காயம்
நெல்லிக்குப்பம், ; பஸ் படியில் தொங்கியபடி பயணம் செய்த கல்லுாரி மாணவர் கீழே விழுந்து காய மடைந்தார். நெல்லிக்குப்பம், மேல்பாதியை சேர்ந்தவர் குணசேகரன் மகன் குகன்,18; கடலுார் அரசு கலைக் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர். நேற்று காலை நெல்லிக்குப்பத்தில் இருந்து தனியார் பஸ்ஸில் கடலுார் சென்று கொண்டிருந்தார். பஸ்ஸில் கூட்டம் அதிகம் இருந்ததால் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தார். குமராபுரம் அருகே வளைவில் பஸ் வந்த போது, படிக்கட்டில் பயணம் செய்த குகன் தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். பள்ளி, கல்லுாரி நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செயகின்றனர். இதனால், இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. இதை தவிர்க்க பள்ளி, கல்லுாரி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.